மக்களின் பாடகர் ‘மருதமலை மாமணியே முருகையா’ மதுரை சோமு (1919 - 1989) நூற்றாண்டை முன்னிட்டு இசை விமர்சகர் எஸ்.சிவகுமார் தி இந்து நாளிதழில் ‘சோமு நீ சமானம் எவரு‘ என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். அறுபது களின் பிற்பகுதி சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு கோயில் கச்சேரி. அன்றெல்லாம் சபா கச்சேரிகளை விட கோயில் கச்சேரிகளே அதிகம். செலவில்லாமல் சங்கீதப் பிரவாகத்தில் விடாய் தீர்ந்த பொற்காலம். அன்று கோயிலில் மகாவித்வான் சோமுவின் தர்பார். தெருவெல்லாம் கூட்டம் அலைமோதியது...
சரி, தர்பார் என்பது என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்திருக்கும் திரைப்படம் ‘தர்பார்’.
பாரசீகம் (ஈரான்) நாட்டின் கெர்மான் மாகாணம் மன்னராட்சியின் தலைமையிட
மாக இருந்தது. அந்த மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம் தர்பார் (Darbar). இங்கு
பாரசீகர்களின் நீதி பரிபாலனம் நடந்தேறியிருக்கிறது. Durbar என்பது உருது சொல். இதற்கு நீதி என்று பொருள். இச்சொல்லிலிருந்து திரிந்தது Darbar.
Darb + bar/ darb என்பதற்கு உருது மொழியில் இல்லம், அரண்மனை, மன்றம்
என்றும் Bar என்றால் வாயில் என்றும் பொருள்.
முகலாயர்களின் ஆட்சியில், குறிப்பாக அக்பர் ஆட்சிக்காலத்தில் இச்சொல் இந்தியாவில் பிரபலமானது. தர்பார், மலபார், பார், தன்பார், சபா,...யாவும் முகலாய
மன்னர்களுடன் தொடர்புடைய சொற்கள். இந்தியில் இச்சொல் ராஜ்தர்பார் (Rajdar
bar)-அரச சபை, ஆம்தர்பார்(Aamdarbar) - நகர சபை என்பதாகத் திரிந்துள்ளது.
சரி, தமிழில் இச்சொல்லுக்கு நிகரான சொல் உண்டா?
‘செல்லல் தீர்க்கும் பல்புகழ்ச் சேந்தனில் / வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் /
மல்லும் சூதும் படையும் மற்றும் கல்விபயில் களமும் கழகமாகும்’ என்கிறது திவாகரம் நிகண்டு.
இப்பாடலுக்கு விளக்கம் தரும் எஸ்.வையாபுரிப்பிள்ளை களம் என்பது வடசொல்.
கூட்டம், திரள் முதல்முதற் பிறந்ததாக இருக்க வேண்டும். திரள் என்பதே நுணுகி அலங்கரித்து ஓலக்கம் என்றானது என்கிறார். அதாவது கழகம் என்பது ஓலக்கம்.
‘ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்’ என்கிறது பதிற்றுப்பத்து. மன்னன் ஓலக்க இருக்கையில் அமர்ந்து சிறப்புக் கூறுதல் என்று பொருள். ஓலக்க இருக்கை என்பது நாண்மகிழிருக்கை.
‘இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்’ என்கிறது கம்பராமாயணம் யுத்த காண்டம்.
‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் / மீக்கூறும் மன்னன் நிலம்’ இக்குறளுக்கு பொருளுரை தந்திருக்கும் தேவநேயப் பாவாணர்,
அலுவல் நேரத்தில் ஓலக்க மண்டபத்திலும் நெருக்கடி நிலைமையில் அரண்மனையிலும் காணக்கூடியவராய் மன்னன் இருத்தல் வேண்டும் என்கிறார்.
செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரை, ‘யாழ்ப்பாணத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்’ . இதில், யாழ்ப்பாணம் சங்கிலித் தோப்பில் ஒரு தொன்மையான கட்டிடத்தின் ஒரு கல்வெட்டில் ‘ திரு ஓலக்கவாயில் கட்டிடம் ‘ எனப் பொறிக்கப்பட்ட செய்தியைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இக்கட்டுரை ஓலக்கம் என்பது மன்னன் அல்லது உயர்ந்தோர் அமரும் இடம் என்றும் திருவோலக்கம் என்பது தெய்வம் அமரும் இடம். இவ்விரு சொற்களும் மொழி வழக்கில் பெரிதும் பயன்படவில்லை என்றாலும் கல்வெட்டு சொல்லகராதியில் இச்சொல் இடம் பெற்றுள்ளது என்கிறது.
ஔவை.துரைச்சாமி எழுதிய ‘சேரமன்னர் வரலாறு ‘ என்கிற நூல், பாணர், கூத்தர், பொருநர், புலவர், முதலானோர் செல்வன் கடுங்கோவின் திருவோலக்கம் நோக்கி வருவாராயினர் என்கிறது.
திருவோலக்கம் என்கிற சொல் திருப்பாவை, திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
ஓலக்கம் என்பதை தமிழ் அகராதிகள் சபாமண்டபம், அத்தாணி மண்டபம், அத்தாணிக்காட்சி, திருச்சமூகம், திருச்சபை என்கின்றன.
சம்மணம் என்பதே சமணம், சமயம் என்றானது. சம்மணம் என்பதன் தமிழ்ச்சொல் ஓலக்கம். சம்மணமிட்டு அமருமிடம் ஓலக்க மண்டபம்.
இதிலிருந்து தர்பார் என்பதன் தமிழ்ச்சொல் ஓலக்கம். அதாவது, பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள் வீற்றிருக்கும் இடம். இதை திவாகர் நிகண்டு மொழியில் கழகம் என்று சொல்லலாம்.